Monday, June 1, 2009

கடவுள்



வந்த வேலை முடிந்ததென்று

கடவுள் ஒருநாள்

விடை பெற்றார் ...

போகட்டும் விடு என பொத்திக்கொண்டிருந்தோம்.

பின் ஒருநாள்

நேர்மை விடை கேட்டது ..

அது ஊழல் உற்சவமேறிய காலம் என்பதால்

நேர்மைக்கும் விடை கொடுத்தோம் ..

நல்ல அடையாளங்களெல்லாம்

நாளுக்கொன்றாய்

விடை பெற்றது .

எது குறித்தும் கவலை இல்லை எங்களுக்கு

நாங்கள் கூடிக்களிக்கவும்

ஆடிப்பாடவும்

கூடவே வந்தன ..கொள்ளைத் தவறுகள்..!

ஓர் நாள்

துயரம் துருவேறிச் சூழ்ந்தது .

அப்போது

எம்மைக்காக்க

எதுவும் இல்லை எம்மிடம் ..!

***

பாவமன்னிப்பு கோரும்

வரிசை நீண்டதாய் இருந்தது .

பாவிகளின் வரிசையில்

கடைசி ஆளாய் கடவுள்

***

படைக்கும் கடவுள்

பக்கத்தில் வரவில்லை ..

காக்கும் கடவுள்

காணாமல் போனான் .

அழிக்கும் கடவுள் மட்டும்

எம்மை ஆட்டிப்படைக்கிறான் .

***

பாவங்களை ரட்சிக்கும்

கடவுள்

ஒரு மாறுதலுக்காக

பாவிகளை ரட்சிக்கத் துவங்கி இருக்கிறான் .