Friday, December 10, 2010

குமார் தையலகம்…

தாமிரா...

குமாரைச்சுற்றி வட்டம்,சாய்சதுரம்,செவ்வகம்,அருங்கோணம்,முக்கோணம் போன்ற ஒருகூட்டம் எப்போதும் இருக்கும்.அது குமாரின் நண்பர்கள் கூட்டம்.அவரது ஆத்மார்த்த நண்பர்கள் என ஒருபட்டியல் எடுத்தால்,அதற்கான ரேஷன்கார்டை ஒரு அம்பதுபேர் வைத்திருப்பார்கள்.

குமாருக்கு அலியார் ராவுத்தர் உரக்கடை மாடியில் ஒரு தையலகம் இருந்தது. ஸ்கூலைக் கட்டடித்துவிட்டு வரும் ஜேக்கப் புத்தகப்பை வைக்க,அலியார்மகன் அக்பர் திருட்டு தம் அடிக்க,பாண்டியன்.டன்..டன் முரட்டுசங்கீதத்தோடு தூங்க,தவசிஅரசியல் பேச, என பல்நோக்குதிட்டத்தில் தையல் தவிர அங்கு எல்லாம் நடந்தது.வந்து போகி றவர்களுக்கான டீ செலவிற்கு அவ்வப்போது துணிதைப்பார் குமார்.

’’எடே..சீட்டு விளையாட ஒருகை குறையுது வந்து உக்காருடே,’’ என தளவா அழைத்தால்போதும்,வெட்டிக்கொண்டிருக்கும் துணியைக்கூட, அப்படியே போட்டுவிட்டு வந்து அமர்வார் குமார்.தையல்கடை சீட்டாட்டக் களமாகும். கார்டைக் கையில் பிடித்தபடி’’குமாரே..நீ துணிகுடுக்கலங்கறதுக்காக எவனும் அம்மணமா போவமாட்டான்டே கவலப்படாம விளையாடு’’ என்பான் தளவா.

குமார் எல்லோரையும் கெடுக்கிறார் என்கிற பேச்சு ஊருக்குள் இருக்கிறது. உண்மையில் குமாரைத்தான் எல்லோரும் கெடுத்துக்கொண்டிருந்தார்கள். யார் வேண்டுமானா லும் ஒருமுறை வந்து கெடுத்துவிட்டுப் போகலாம் என்கிற அளவிற்கு, குமார் நல்லவர்.

அடிப்படையில் குமார் ஒரு நாத்தீகர் ஆனால் அவரது நாக்கில் எப்போதும் சனி குடி கொண்டிருக்கும்.அந்த சனி எழுந்து ஒருநாள் கரகாட்டம் ஆடியபொழுதுதான் அவர்கள் ஒருநாடகம் போடுவது என முடிவெடுத்தார்கள்.அவர்கள் எடுத்தமுடிவில் தவறில்லை அதை நாகராஜன் முன்னிலையில் எடுத்ததுதான் தவறு.

நாகராஜன் அகராதியில் முடியாது என்கிற வார்த்தையே கிடையாது. இமயமலை யைத் தூக்கி கூனிகுளத்துக்கரையில வைக்கணும் நாகராஜன் என்றால் ’’இந்தா குளிச் சுட்டு வந்து வச்சுர்ரேன்’’என்பான்.அவன் சொல்லும் விதத்தில் அதை நாகராஜன் செய்து முடிப்பான் என நம்பத்தோன்றும்.அவன் பேச்சுசாதுர்யம் அப்படிப்பட்டது.அதுவுமில் லாமல் இரண்டொருநாடகத்தில் நடித்து, நாடகத்துறையில் முன்அனுபவம் பெற்ற வனாகவும் இருந்தான்.இந்தக் காரணங்களை மனதில்கொண்டு,நாகராஜை முன்னி ருத்தி,இந்த நாடகத்தை நடத்துவதென்று முடிவெடுத்தார் குமார்.

’’நீ எதப்பத்தியும் கவலப்படாத குமார் நா சொல்றதமட்டும் செய் மத்தத நா பாத்துக் கறேன்.’’நாகராஜனின் இந்த வார்த்தை குமாருக்கு மட்டுமில்லை,அங்கிருந்த எல்லோ ருக்கும் தெம்பூட்டுவதாக இருந்தது.எல்லோரையும் கர்வமாகப்பார்த்தபடி’’யேய் நல்லா கேட்டுக்கங்கப்பா, இந்த நாடகத்துக்கு உங்ககைலருந்து ஒரு பைசா செலவுபண்ணக் கூடாது. அது இந்த நாகராஜனுக்கு பெரிய அவமானம்.நா வசூல் பண்ணித்தாறேன். இல்லன்னா நானே செலவு பண்றேன்.’’

’’சர்தாம்டே..எப்படி வசூல் பண்றது.குறைச்சுப்பாத்தாலும் ஒரு பத்தாயிரம் ரூபாயாவது வேணுமே.’’என்றான் அக்பர்.

’’நா இருக்கும் போது எதுக்கு குறைச்சுப்பாக்கறே..’’என்றபடி,மேவாயை தடவிக் கொண்டு ’’ம்..பத்தாயிரம்..சரி அக்பர் ஒரு லிஸ்டப் போடு’’ அக்பர் பேப்பர் எடுக்க, கடகட வென நாலைந்து பண்ணையார்கள் பெயரைச்சொல்லி தலைக்கு ஆயிரம் எனப்போட்டான்.’’ஏம்ப்பா இவ்வளவு பணம் தருவாங்களா?ஒரு ஐநூறுரூபா போடேன்’’. என்ற தளவாயிடம் நான் இதைஎடுத்துச் செய்யனுமா வேணாமா? ஐநூறு ரூபா குடுங்க பண்ணையார்ன்னு கேட்டா அவங்க என்னை அசிங்கமா நெனப்பாங்களா? இல்லியா?என ஏகத்துக்கு கோபப்பட்டான் நாகராஜன், அவன் கோபத்தைப் பார்த்து எல்லோரும் அமைதியானார்கள்.

நாகராஜனின் கணக்குப்படி பதினைந்தாயிரம் வந்தது.’’சரிதானாடே போதுமா? இல்ல இன்னும்கொஞ்சம் வசூல் பண்ணித்தரட்டுமா?அடுத்தநாடகத்துக்கு இருக்கட்டு மேன்னு இன்னும் சிலரை விட்டு வச்சிருக்கேன்.’’நாகராஜன் இதைச்சொன்னதும் எல்லோரும் கோரஸாக ’’இல்ல,இது போதும் மத்ததை அடுத்த நாடகத்துல பாத்துக் கலாம்’’என்றார்கள்.

குமார் செலவில் டீவடை சாப்பிட்டுவிட்டு,மிச்சம் இருக்கும் ஜந்தாயிரம்ரூபாயை ஒரு அக்கவுண்ட் ஒபன் பண்ணி அதில் போட்டு வைத்தார்கள். நாடகமன்றத்துக்கு பாரதி தாசன் நாடகமன்றம் என பெயர் வைத்து.செப்டம்பர்பதினேழு அன்று நாடகம் நடத்துவதென்று முடிவானது.நிர்வாகக்குழுவை உருவாக்கி சங்கத்தை கலைக்க யெத்தனித்தபோதுதான் அக்பர் முக்கியமான கேள்வி ஒன்றைக்கேட்டான். ’’எல்லாம் சர்தாம்..கத என்ன..?’என்ற அக்பரின் கேள்விக்கு குமார் இன்னொரு ரவுண்ட் டீ, வடை சொல்ல வேண்டியதாகஇருந்தது.வடை வரும்வரை தீவிர சிந்தனையில் இருந்த நாகராஜன், வடை வந்ததும் ஒரு வடையை எடுத்துக்கடித்தபடி ’’நா ஒரு கத சொல்றேன்’’ என்றான்.ஆளுக்கு ஒரு வடையாக எடுத்து தட்டைக்காலி செய்தபோது ’’ஒரு ஊர்ல ஒரு பண்ணையார்’’எனக்கதையைத் துவங்கினான் நாகராஜன். ’’ரொம்ப நல்லா இருக்குடே’’என்ற தளவாவின் வடைவிமர்சனத்தை நாகராஜனின் கதை விமர் சனமாக எல்லோரும் புரிந்துகொண்டார்கள்.அந்தஉற்சாகத்தில் முழுக்கதையையும் சொல்லி முடித்தான் நாகராஜன்.

நாகராஜன் கதையைவிட,அவன் வசூல் பண்ணித் தருவதாகச் சொன்ன கணக்கு எல்லோருக்கும் பிடித்ததாக இருந்தது. இரண்டு நாட்களில் கதையை முடித் துத் தருவதாகச் சொல்லி நாகராஜன் விடைபெற்று சென்றதும் தளவா அடக்க முடி யாமல் சிரித்தான்.

’’எல்லாப்பயலுவளையும் முட்டாளாக்கிட்டு போய்ட்டானே, கெட்டிக்காரம்ப்பா நாகராசன் ரெண்டு டீ வடைக்கு எம்புட்டு பேச்சு..அது எப்படி குமாரு, இல்லாத பணத்தை அக்கவுண்ட் ஓப்பன் பண்ணிப் போடப்போறியளோ..இது ஒப்பேறாது’’ தளவாவின் அவநம்பிக்கை யாருக்கும் பிடிக்கவில்லை.எல்லோரும் நாகராஜனை நம்பினார்கள்.’’

’’ வசூல் பண்ண முடியலன்னா நா செலவு பண்றேன்னு சொல்லி இருக்கான்டே செய்வான்’’கோபமாக சொன்னார் குமார்.

’’கிழிச்சாரு...குடிச்ச டீக்கே காசு குடுக்கல,இவரு செலவு பண்ணுவாராக்கும் ’’தளவாவின் பேச்சில் கிண்டல் இருந்தது.யாரும் அதை பொருட்படுத்தவில்லை. எல்லோருடைய மனதுக்குள்ளும் பதினைந்தாயிரம் ரூபாய் பற்றிய நம்பிக்கை பிரதானமாக இருந்தது.

சொன்னபடியே இரண்டு நாட்களில் இடுப்பு சாரத்தில் ஒரு நாப்பது பக்க நோட்டைக் கட்டிக்கொண்டு வந்தான் நாகராஜன்.அதற்குள் நாடகத்திற்கான மேடைக் கதை இருந்தது.

’’யேய் குமாரு நீ யோகக்காரனப்பா, கதை பிரமாதமா வந்திருக்கு’’.

‘’அத நாங்க சொல்லனும்,முதல்ல கதயச் சொல்லு.’’அக்பர் இதைச் சொன் னதும் நாகராஜனுக்கு முகம் சுருங்கிப்போனது அதைக் காட்டிக்கொள்ளாமல், திருச்சி பண்ணையார்கிட்ட பேசுனேன் குமார்,எல்லாசெலவையும் நானே பண்றேன் னார். நாந்தான் வேணாம் ஆயிரம் ரூவா மட்டும் குடுங்கன்னேன்’’

நாகராஜன் பணவிவகாரத்தை ஒரு துருப்புச்சீட்டைப் போல உபயோகித்தான் எல்லோரும் அமைதியானார்கள்.அந்தஅமைதியோடு எழுதிவைத்த நோட்டைஎடுத்துக் கொடுத்தான்.நிதானமாக படித்துப் பார்த்த அக்பர்‘’கதயில நிறைய ஓட்டை இருக்கடே’’ என்று சொல்லவும்,சட்டென்று ‘’அந்த ஓட்டைய அடைக்கறதுக்குத்தான உன்னை வசனம் எழுதச்சொல்றேன்’’என்றான் நாகராஜன்.தன்னை வசனகர்த்தாவாக்கிய, நாகராஜனை தனது சோடாபுட்டிக்கண்ணாடி வழியே,கண்கலங்கிப் பார்த்தான்,அக்பர். அந்தக் கலக்கத்தில் நன்றி இருந்தது.

‘பண்ணையார் உன்னை அழிக்காம விடமாட்டேன் ஹா..ஹா..ஹா..ன்னு ஒரு மர்மக் குரல் ஒலிக்கும்,பண்ணையார் பயப்படுவாரு இதுதான் நாடக்த்தோட முதசீனு இத மட்டும் மாத்திராத..அப்பத்தான் நாடகம் முடியறவரைக்கும் ஆடியன் ஸுக்கு ஒரு சஸ்பென்ஸ் இருந்துகிட்டே இருக்கும்.எழுதிமுடிச்சுட்டு என்கிட்ட ஒரு தடவ காட்டிரு’’ என இன்ஸ்டெக்‌ஷன் கொடுத்துவிட்டுச்சென்றான்,நாகராஜன்.

அன்றிலிருந்து அக்பர் காலையில் தூங்கி எழுந்ததிலிருந்து இரவு படுக்கும் வரை ஏதாவது ஒரு வசனத்தைப் பேசியபடி இருந்தான்.குமார் தையலகம் ஒரு தற் காலிக நாடகமன்றமானது.தனது இயல்பான சோம்பேறித்தனத்தையும் மீறி,குமார் பரபரப்பாக இயங்கினார். நடிக்க, விருப்பம் தெரிவித்தவர்கள் பெயர்பட்டியலைப் பார்த் ததும் குமாருக்கு அயர்ச்சியாக இருந்தது.எல்லோருமே கதாநாயகனாக நடிக்கும் வாய்பைக் கேட்டார்கள்.இரண்டு டூயட் வேண்டுமென்பது குறைந்தபட்சக் கோரிக்கை யாக இருந்தது. தங்களுக்கு,ஒரு ஜோடி இருக்கும்படி பார்த்துக் கொண்டால்,நடிகை செலவை ஏற்றுக்கொள்ளவும் சிலர் தயாராக இருந்தார்கள்.

குமாருக்கு தனது நாடகத்திட்டம் இத்தனை வரவேற்பைப்பெற்றதில்,தலைகால் புரியவில்லை.ஆண்டியாப்பிள்ளையிடம் பந்தலுக்கும்,வேலுஆசாரியிடம் மேடைக்கும் சொன்னார்.நாகர்கோவிலுக்குச்சென்று அரசுசெட்டிங்ஸிற்கு அட்வான்ஸ் கொடுத்து விட்டுவந்தார்.எல்லாம் கைக்காசு.குமாரின் இந்தவேகமும்,பரபரப்பும் தளவாவிற்கு வேடிக்கையாக இருந்தது.

’’என்னடே...,துட்டு செழிப்பா இருக்கு போலருக்கு,அந்த பதினைஞ்சாயிரத்த வசூல் பண்ணியாச்..சா.’’தனது கடை வாசலில் வைத்து இதைக் கேட்டான் தளவா. அவனது கேள்வி மிகவும் நக்கலாக இருந்தது.அதே நேரத்தில் குமார் இந்த நாடகத் தின் மூலம் அழிந்துவிடக்கூடாது என்கிற ஆதங்கமும் இருந்தது.

‘’ இப்ப நம்ம கைலருந்து போடுவோம் பொறவு எடுத்துக்குவோம். வசூல் பண்ணிக் குடுத்துருவான்.வேறஎன்ன’’குமாரின் இந்த பதில் தளவாவிற்கு திருப்தியாக இல்லை. ’கடனகிடன வாங்கி மாட்டிக்கிடாத..பொறவு பஜார்ல லாந்தமுடியாது’ என்றான். அவர் கள் பேசிக்கொண்டிருக்கும்போதே நாகராஜன் குடுத்தான் என திருநெல்வேலியிலி ருந்து ஒருபார்சலை கொண்டு வந்து கொடுத்தான் சாகுல்.’ பார்சல் பெருசா இருக்கடே.. பதினஞ்சாயிரத்தையும் ஒத்த ரூவா நோட்டா குடுத்து விட்டுருக்கானோ’ என்றபடி பார்சலைப்பிரித்தான் தளவா.அதற்குள் டொனேஷன் புக்கும்,பிட்நோட்டீஸும் இருந் தது.’குமாரே உன்னை வசூல் பண்ணிஎடுத்துக்கிட சொல்லி இருக்கான்.புரியுதா?’

தளவா சொன்ன இந்த வார்த்தைகளின் உண்மை சிலநாட்களில் குமாருக்குப் புரிந்தது.நாடகத்திற்கான ரிகர்சல் ஆரம்பித்தப்பிறகும் நாகராஜனிடமிருந்து பணம் பற்றி எந்தத் தகவலும் இல்லை.பத்தாயிரத்தை வசூல் பண்ணிவிட முடியுமா?என்கிற கேள்வி எழுந்தது.

எனக்கு,ஒரு டூயட் குடு குமாரு ஐநூறு ரூவா தாறேன் என்று பேரம் பேசினான் காஜா.’’யே..நீ நடிக்கவே இல்லியே டூயட் மட்டும் எப்படிப்பாடுவே’’என்றார் குமார். கதாநாயகி கதாநாயகனை சின்னவயசுல எப்படி இருப்பான்னு கற்பனை பண்ணி பாட றான்னு சீன் வை’’என்ற,காஜா நான்கடிக்கு சற்று கூடுதல் உயரம்.இப்படி ஆளாளுக் குக் கிண்டல் செய்யும் நிலைஏற்பட்டுவிட்டதே என்கிற ஆதங்கம் இருந்தாலும் குமார் எந்தவிதமான சமரசத்துக்கும் தயாராக இல்லை. நாகராஜனை முன்னிருத்தி ஆரம்பிக் கப்பட்ட நாடகம் நாகராஜனின் கண்முன்னால் இந்த நாடகத்தை நடத்திக் காட்டிவிட வேண்டும் என்கிற வெறியை ஏற்படுத்தியது.இத்தனை இளைஞர்களை வைத்துக் கொண்டு ஒரு நாடகத்தை நடத்த முடியாதா... அதையும்தான் பாத்துருவோம்,என முடிவெடுத்தார் குமார்

‘’நாம ஆளுக்கு கொஞ்சம் பணம் போட்டுத்தான் நாடகத்தை நடத்தனும் என்னசொல்லுதியோ?’’ரிகர்சல் நடக்கும் இடத்திற்குவந்து குமார் இதைச்சொன்னதும், கவலப்படாதீங்க குமாரண்ணே நாங்க வசூல் பண்ணித்தாறோம் என உற்சாகப்படுத்தி னார்கள்.ஆளுக்கு ஒருடொனேஷன் புத்தகத்தை வாங்கிச் சென்றார்கள்.உடையாரும், குமாரும்வெளிவசூலுக்கு போவதென்றும் அக்பரும், சேக்கும் ரிகர்சலைப் பார்த்துக் கொள்வதென்றும் முடிவானது.பம்பரமாகசுழன்று வசூல்வேட்டையை நடத்தினார்கள். எதிர்பார்த்தமாதிரி பணம் வசூலாகவில்லை.

ஒருநாள்

வசூல்முடித்துவிட்டு வரும் வழியில் நாகராஜன் குமாரை சந்தித்தான் இந்த நாடகத்துக்கும் தனக்கும் சம்மந்தமில்லாதவனைப்போல ‘’அப்புறம் குமாரு வசூல் எப்படி இருக்கு’’ என்றான்.குமாருக்கு வெறிகொண்ட கோபம் வந்தது. அத்தனையும் அடக்கிக்கொண்டு ‘’யேன்டே..இப்படி கழுத்தறுத்தே’’என அமைதியாகக் கேட்டார்.

‘’நீ நெனைக்கற மாதிரி நாடகம் நடத்துறது சாதாரணவிஷயமில்ல.நானும் நிறைய பேருகிட்ட பேசிப்பாத்தம்டே எவனும் காச இளக்க மாட்டேங்கறான்.’’

‘அதையாவது சொல்லலாம்ல பதினஞ்சாயிரம் வசூல் பண்ணித் தாறேன்னுட்டு நீ பாட்டுக்கு காணாமப் போயிட்டே..’’

‘’தப்புதான்.. ஆனா நீ ஒன்னு புரிஞ்சுக்கனும்.நா வசூல் பண்ணமுடியலன்னு சொல்லி இருந்தா நீ என்ன பண்ணி இருப்பே .சரி நாடகம் நடத்த வேணாம்னு முடிவு பண்ணி இருப்பே.. இப்ப, எம்மேல இருக்கற கோபத்துல இறங்கி வேலை செய்றே.. உன்னை வேலை செய்ய வச்சிருக்கேன்.இந்த நாடகத்த நடத்தறது நீ இல்ல குமாரு நாந்தான்..எப்படியாவது நீங்க நாடகத்தை நடத்தனும்ங்கறதுக்காக நா ஊருக்கே வராம இருக்கேன் தெரியுமா?’’ நாகராஜன் பேசுவது குமாருக்கு நியாயமாகவேபட்டது. நாகராஜன் கெட்டவனோ,ஏமாற்றுக்காரனோ இல்லை தன் சக்திக்கு மீறி பேசுகிறவன்.

’’சரிடே வசூல நா பாத்துக்கறேன் நாடகத்துக்கு வந்து சேரு’’என்றார்.

’’ஒன்னு பண்ணு குமாரு வசூல் எப்படி இருக்குன்னு பாரு கையக் கடிக்கும்னா நாடகத்தை தள்ளிப்போடு.நம்மள எவன் கேப்பான்’’குமாரை பேராபத்திலிருந்து காப் பாற்றும் முனைப்போடு இதைச் சொன்னான். நாடகத்தை நிறுத்து என்கிற நாகராஜ னின் வார்த்தை குமாரை மேலும் தூண்டிவிட்டது.அதுவரை கூடவே அமைதியாக வந்து கொண்டிருந்த சனி வாய் திறந்தது.’’ நா யேன்வே நாடகத்தை நிறுத்தறேன். மிஷினை வித்து செலவு பண்ணுவம்வே’’என்றார் குமார்.

எல்லாரும் அசந்து போறமாதிரி இந்த நாடகத்தை நடத்த வேண்டும் என்கிற வெறியோடு ஓவியன் செல்வகுமாரை அழைத்து ஊர் முழுக்க சுவர் விளம்பரம் செய்தார். ஊர் களைகட்டியது.

நாடகத்தன்று வந்து சேர்ந்தான் நாகராஜன்,அவன் மீது யாரும் எந்தவிதமான கோபத்தையும் காட்டவில்லை.’’நீ செஞ்ச வேலைக்கு உன்னய ஊனிதான் பந்தல் போட்டிருக்கணும்,போனாப்போகுதுன்னு மன்னிச்சுவிட்ருக்கோம்’’ அக்பர் மட்டும் இதைச்சொன்னான்.

‘’யே.. என்கிட்ட நீ கோவப்படமுடியாது,மானத்தோட மல்லுகட்டறது வேஸ்டுன்னு அத தூக்கியெறிஞ்சவன் நான் போய் வேலையப்பாருடே’’சிரித்தபடிச் சொன்னான் நாகராஜன்.

இரண்டாயிரம்பேர் ஒரு பொட்டல்வெளியில் கூடியதை மூலைக்கரைப்பட்டி அன்றுதான் பார்த்தது.ஒரு திருவிழாவைப்போல நாடகம் நடந்த அந்த இரண்டரை மணி நேரமும்,கைத்தட்டலும் சிரிப்புமாக கழிந்தது.நாடகம் நல்லாருக்கு நீங்க தர வேண்டிய பாக்கித்தொகைய தர வேணாம் என்றார் அரசு செட்டிங்ஸ்காரர்,அப்படி இருந்தும் இரண்டாயிரம் ரூபாய் துண்டு விழுந்தது குமார் சொன்ன சொல்லைக் காப்பாற்றும்விதமாக மிஷினை விற்றுதான் செட்டில் செய்தார்.

இப்போது அந்த ஊரில் குமார் தையலகம் இல்லை..பாரதிதாசன் நாடகமன்றம் இல்லை என்ன இருந்தாலும் குமார் போட்ட நாடகம் மாதிரி வராதுடே என இன்னமும் மக்கள் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.