Friday, April 13, 2012
புலிப்பால் கறக்கும் எருமை மாடு
அந்த ஊருக்குப் புலிப்பால் கறக்கக்கூடிய ஒரு எருமை மாட்டை தானம் தருவதென்றும்,அந்த எருமை மாட்டைக் கொண்டு நாடு முழுவதும் புலிப்பால் சப்ளைசெய்வதென்றும் அவர்கள் திட்டமிட்டபோது யாரிடமும் அதுகுறித்து கலந்தாய்வுசெய்யவில்லை.காரணம் அப்போது அது நாகரீகத்தை வடிகட்டிய கிராமமாக இருந்தது.
அந்த கிராமமக்களுக்குப் புலிகள் குறித்தோ அல்லது புலிப்பால் தேவை குறித்தோஎந்த அறிவுத் தெளிவும் இருக்கவில்லை.அவர்கள் அறிந்த புலிகள் இரண்டேஇரண்டுதான் ஒன்று தேவர் பிலிம்ஸின் சினிமா புலி இதை அடக்குபவர்எம்.ஜீ.ஆர்.மற்றொன்று சீட்டா பைட் தீப்பெட்டியில் இருக்கும் வெட்டும்புலி அட்டைப்படம்.அப்படிப்பட்ட பகுதிக்கு புலிப்பால் கறக்கும் எருமை தானம் என்பதை அங்கிருக்கும் மக்களால் நம்ப முடியவில்லை.அன்று இரவே ஊர் கூட்டத்தைக்கூட்டினார்கள்.ஊரில் உள்ள எல்லோரும் கூட்டத்தில்கலந்து கொண்டார்கள்.
புலிப்பால் கறக்கும் எருமை வந்த பிறகு தங்கள் ஊரின்வளர்ச்சி அபரி மிதமாக இருக்கப் போகிறது என்கிற எண்ணம் ஒவ்வொருவருக்குள்ளும் இருந்தது.எருமையை கட்டிப்போடும் இடத்திற்கருகே ஒரு பெட்டிக்கடை யாவது போட்டுவிட வேண்டும் என எல்லோரும் நினைத்தார்கள்.
ஊர்கூட்டம் நடந்து கொண்டிருந்த மைதானத்தின் கடைசிமூலையில் நின்றுகொண்டிருந்த ஒரு இளைஞனுக்கு மட்டும் எருமைமாடு புலிப்பால் கறக்காது என்று தோன்றியது.அவன் எதுவும் சொல்லாமல் சுவர் மீது காலை ஊன்றியபடிநின்றான்.அவனது முதுகு பக்கத்தில் பிதா சுதன் பரிசுத்த ஆவியைக் கொண்டுஎம்மை ரட்சிப்பீராக-ஆமென் என்ற சுவர் வாசகம் இருந்தது.
’’அவங்க ஒரு எருமையைக் கொண்டு வந்து நம்ம எடத்துல கட்டி, புலிப்பால் தேவை இருக்கறவங்களுக்கு பால் கறந்து குடுக்கதுல நமக்கென்ன லாவம் ’’என்றுகேட்டான் கூட்டத்தில்ஒருவன்.
கூட்டத்திலேயே அதிகம் படித்தவரும்அறிவாளியாக கருதப்படுபவ ருமான ஒரு பெரியவர் எழுந்து தொண்டையைச் செருமியபடி’’அப்படி தனித்தனியா பெலனை எதுர்பாக்க ஏலாது.ஊருக்குள்ள அந்நிய நட மாட்டம்இருக்கும் அது நம்மள்ல கடகண்ணி வச்சிருக்கவுகளுக்கு யாவாரத்தக் குடுக்கும், வந்து போறவுக தங்கறதுக்கு ஒரு குடுசகிடுச போட்டுத்தரலாம் அதுலஒரு வருமானத்தப் பாக்கலாம்.எருமைக்குன்னு ஒரு கூடாரம் கட்டுவாவ அதுல சோலி கிடைக்கும்..இம்புட்டு எதுக்குடே எருமைக்குன்னு தனியா டேம்லருந்து தண்னி எடுத்துட்டு வாரவளாம். அந்தத் தண்ணில நாம ஒரு பயிறுபச்ச உண்டாக்கிக் கிடலாம்’’.
பெரியவர் ஒவ்வொரு அணுகூலமாக சொல்லச் சொல்ல எல்லோரும் அதில் அவரவர் சாத்தியங்களைப் பொருத்திப் பார்த்துக் கொண்டார்கள்.
கூட்டத்திற்குள் ஒரு சிறு அமைதி ஏற்பட்டது.
அப்போதுதான் அவன் அந்தஅற்புதமான கேள்வியைக் கேட்டான்.
’’எருமை மாடு சாணி போடுமா?’’ எல்லோரும் அவனை வினோதமாகப் பார்த்தார்கள்.சிலர் வாய்விட்டுச் சிரித்தார்கள்.
’’லேய் ..படுச்ச முட்டாளா இருக்கிய எருமன்னா சாணி போடாதா?’’
’’இல்ல புலிப்பால் கறக்கற எருமயாச்சே எப்படி சாணி போடும்னு கேட்டேன்’’என்றான்.
பெரியவருக்கு தன் அறிவிற்கு எதிராக பேசுவது கோபத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியது.’’புலிப்பால் குடுக்க எருமை எப்படி சாணி போட்டா நமக்கென்னடே…இந்தாருங்கப்பா இது நம்ம ஊருக்கு கெடச்ச பெருமஅதுக்குத்தக்கன நடந்துக்கங்க.அவம் சொன்னான் இவன் சொன் னான்னு ஆரும்எதுவும் சொல்லப்படாது.எருமைய நாம காபந்து பண்ணி யே தீரணும் புலிப்பால்கறந்தே தீரணும்’’.அந்தக் கூட்டத்துக்கு ஒருமுற்றுப் புள்ளி வைக்கற மாதிரி அவரு பேச்சு ஓங்கி ஒலித்தது எல்லோரும் அந்தப் பேச்சுக்கு அடங்கினார்கள்.
அதுக்குப்பிறகு யாரும் எருமையப்பத்தி கெம்பல..கூட்டம்கலைந்தது. எல்லாரும் எருமைகூடாரத்துல நமக்கு ஒரு நல்ல சோலி கிடைக்கும் என்கிறதெம்பில் தூங்கப் போனார்கள்.
மறுநாளிலிருந்து ஊருக்குள் வேத்து் மனிதவாடை கொஞ்சம் தூக்கலாகவே இருந்துது. மண்ணைக் கிளறியபடி ஏதோ தஸ்ஷு புஸ்சு என்று என்னத்தையோ பேசிக்கொண்டு இருந்தார்கள்.’எருமைக்கு கூடா ரம் போடுததுக்கு ஒரு எடத்த ரெடி பண்ணுதாவ’’ என்று சொன்னான் ஒருத்தன்.’ஒத்த எருமைக்கு இம்புட்டு ஆராய்ச்சியா’ எல்லாரும் ஆச்சர்யப்பட்டார்கள்.
’’மாடு என்னமோ எருமைன்னாலும் கறக்கறதுபுலிப்பாலாச்சே’’ என்றார் மீசைய நீவி விட்டுக் கொண்டேபூதப்பாண்டி.அவரு இதைக்கம்பீரமாகச் சொன்னபோது அவரு எடத்துக்குப் பக்கத்தில எருமைகட்டற எடத்தபாத்து கொண்டு இருந்தார்கள் அந்தக் கெப்புரு அவருக்குள் இருந்துது.
ஒரு வழியாக் கடலுக்குப் பக்கத்துல ஒரு இடத்தைக் கண்டு பிடித்து இதுதான் எருமை கட்ட தோதான இடம் என்று முடிவு பண்ணினார்கள். எருமைய குளிப்பாட்ட கடலிலிருந்து தண்ணீர் எடுக்கப் போகிறார்கள் என்கிற யோசனை சிலருக்கு ஒருவிதமான பயத்தைக் கொடுத்தது காரணம் அவர்கள் அந்தப்பகுதியில் மீன்பிடித்துப் பிழைக்கிறவர்கள்.
’’எரும குளிச்ச தண்ணில வாழமாட்டோம்னு மீனுவல்லாம் வேற திக்குக்கு போயிருமாம்ல’’ தனது சந்தேகத்தை முன் வைத்தான் புதிதாய் கடலாடும் ஒரு இளைஞன்.
அவனுக்கு ஒத்திசைவாய் மற்றொருவன் ’’ஒருகடல் தண்ணிய இந்த எரும ஒன்னா குளிக்குமாம்’’ என்றான்.
‘’இவ்ளோ பெரிய கடல்ல ஒத்த எருமை குளிக்க எம்புட்டு தண்ணிய எடுத்துரப் போறாவ’’ என்று அமைதிப்படுத்தினார் ஒருவர்.
ஒரு நல்ல நாளாகப்பார்த்து எருமைக்கு கூடாரம் கட்டுவதற்கு வானம் தோண்டஆரம்பித்தார்கள்.அன்று அந்தக்கிராமம் பாக்காத ஆளையெல் லாம் பார்த்தது.
’’எங்கிட்டோ ஒரு மூலையில இருக்கற நம்ம மேல இம்புட்டு அக்குசா இருக்காகளே இனி எந் நாளும் இவுஹளுக்கு உம்மையா இருக்கணும்’’ ஒரு பெருசு வாய் விட்டு சொன்னார்.
பெரியபெரிய மனிதர்களெல்லாம் எருமையை அங்கு கொண்டுவந்து சேர்க்க பிரயாசையெடுப்பது சிலருக்கு ஒரு சந்தேகத்தை எழுப்பியது. இது ஏதோ ஒரு அழிவிற்கான வேலை என்கிற அச்சம் அவர்களுக்குள் எழுந்தது.
’’வெள்ளாமை வெளையற வயல்ல மண்ணள்ளிப் போட்டது கணக்கா என்னத்தயோ பண்ணப் போறாவன்னு தெரிஞ்சுபோச்சு.மாட்டை இங்கன கட்டக் கூடாதுன்னு பல ஊருக்காரவுஹ மறிச்சதும் மாட்ட எங்கனயும் கட்ட ஏலாம இங்ககொண்டாந்துருக்காங்க’’ என்று சொன்னவனை யாரும் மதிக்கவில்லை..
’’எருமை… புலிப்பால் கறக்குங்கறது என்னமோ நெசந்தான் ஆனா அந்த எருமை கழியற சாணி ஆபத்தானது..இத எப்படியாவது நிறுத்திப் போட னும்.இது நம்ம பூமி இதுக்கு நாமதான் நல்லது செய்யணும்’’ என்றவன் அத்தோடு நில்லாமல் எருமையைக் கொண்டு வரக்கூடாது என குரல் கொடுக்க ஆரம்பித்தான்.
மாட்டைக் கொண்டு வர விரும்பிய மனிதர்களுக்கு இது பெரிய தலைவலியாக இருந்தது.எருமையை வாங்கவில்லை என்றால்
எருமை வியாபாரிகள் ’இவ்வளவுதானா உங்க செல்வாக்கு’ என்று சிரித்து விடுவார்களே எனப் பயந்தார்கள்.இவர்களை மிரட்டித்தான் காரியம் சாதிக்கமுடியும் என முடிவெடுத்தவர்கள்.எருமை வேண்டாம் என்று சொன்னால் சுட்டுவிடுவோம் என மிரட்டினார்கள். அந்த மிரட்டலுக்கு யாரும் பயப்படவில்லை.எருமை வேண்டாம் என்கிற குரல் இன்னும் ஓங்கி ஒலிக்கத்துவங்கியது.ஆனபடி ஆகட்டும் என்று சுட்டார்கள்.ஒரு மரணபலியோடு அடங்கியது கூட்டம்.
அடங்கியது எருமை வேண்டாம் என்கிற கூட்டம் மட்டுமில்லை. வெளிநாட்டில் எருமை வியாபாரிகளுக்குள் சண்டை வந்து அவர்களுக்குள் பிரிவினை வர…, எருமைத்திட்டம் அத்தோடு அடங்கியது.
.அப்போது நல்ல வியாபாரம் தெரிஞ்ச சிலர் கையில் அதிகாரம் இருந்துது. அவர்கள் வீட்டுமனை வியாபாரி மாதிரி நாட்டைக் கூறு கட்டி விற்க நினைத்தார்கள். அள்ளி தண்ணீர் குடித்த குளமெல்லாம் அழிந்தது.பாட்டில் தண்ணீர் வாங்கிக் குடிக்கவில்லையென்றால் நோய் வரும் என்கிற நிலை உருவாகியது.வந்தேரிகள் பணம் சம்பாதிக்க சொந்த மக்களின் சங்கில் கூசாமல் ஏறி மிதித்தார்கள்.
நாடே சூனியம் பிடித்த மாதிரிதான் இருந்தது. தொழில் வியாபாரம், விவசாயம் எதுவும் விளங்கவில்லை.எல்லாம் புலிப்பால் இல்லாத குறைதான் என்று ஒரு பேச்சு இருந்தது.’’அந்த எருமையக் கொண்டாந் திருந்தா இந்தச் சீண்ட்ரமில்ல’’என்று எல்லாரும் பேசத்துவங்கினார் கள்.இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் அந்த எருமைய கொண்டு வரும் திட்டத்தைத் திரும்பவும் தூசி தட்டி ஆரம்பித்தார்கள்.
’’அடப்பாவிகளா வாங்கின விலைக்கு வந்துட்டீங்களே’’ என்று எருமை வேண்டாம் என்று சொன்ன கூட்டமும் மீண்டும் எழுந்து நின்றது. நாட்டைக் காப்பற்ற உயிரைக் கொடுப்போம் என்று சொல்லி கையில் காலில் விழுந்தவர்கள் வெங்காயத்தை விழுங்கிய கோழியைப் போல அமைதியாக இருந்தார்கள்.
எருமை வேண்டாமென்றவர்களின் குரலை அவர்கள் ஒரு பொருட்டாக மதிக்கவில்லை நீங்க போடுகிற கூச்சலைப் போடுங்க..நாங்க செய்யுற வேலயச்செய்யுறோம் என்று இவர்கள் சத்தத்தை வகை வைக்காமல் எருமையக் கொண்டு வரும் வேலை நடந்துகொண்டு இருந்தது.
அப்போதுதான் ஒரு நாட்டில் ஒரு எருமை செத்து பெரிய பிரச்னை ஏற்பட்டது.’’.அது மாதிரி ஒரு சூழ்நெல வந்தா என்ன பண்ணுவியோ? எருமைய நெனச்சாலே எங்களுக்கு பயமா இருக்குய்யா.. வேணாம்யா’’ என்று தயவு பண்ணி இவர்கள் கேட்கவும் .நாட்டில் இருக்கும் மாட்டு டாக்டரெல்லாம் ஒன்றாக அந்த ஊர்ல கூடி குமிந்தார்கள்.
’’இது ஒரு நல்லஎருமை சாணியெல்லாம் போடாது புளுக்கைதான் போடும் என்று அடித்துச் சொன்னவ்ருக்கும் எருமைக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை.. ஆனால் அவர் முக்கியமான புழுக்கை விஞ் ஞானி. பெரிய பெரிய பதவியிலெல்லாம் இருந்தவர். ’’நம்ம மண்ணுல புரண்டு வளந்த மனுசன் எரும புழுக்கை போடும்னு சொல்லிட்டாரே’’ என்று எல்லாருக்கும் வேசடையாக இருந்தது.
’’ஆரு என்ன சொன்னாலும் எங்க போரு போருதான் எருமைய இங்க வளக்கக் கூடாது. வேணுமின்னா கூடாரம் கட்ட எம்புட்டு செலவு பண்ணுனியளோ அத வசூல் பண்ணி குடுத்துருதோம் என்று சொன் னார்கள் எருமை வேண்டாம் என்று சொன்ன கூட்டத்தார்.
எருமை வேண்டுமென்று ஒரு கூட்டத்தை அங்கங்கே உருவாக்கி அதற்கு மானியம் வழங்கிக் கொண்டிருந்தது அதிகார வர்க்கம்.
எருமை வேண்டாம் என்று சொல்கிறவர்கள் எங்கோ பணம் வாங்கிக் கொண்டு பேசுகிறார்கள்.அவர்கள் வேற்றுமதத்துக்காரர்கள்.இதில் சாதியும் மதமும் விளையாடுகிறது என நாளுக்கொரு கதைகள் புறப்பட்டுக் கொண்டிருந்தது.
நாளுக்குநாள் எருமையை நினைத்து பயப்படும் கூட்டமும் அதிகரித் தது.ஒரு கருப்பு மனிதர் மட்டும் அவ்வப்போது வந்து இதோ எருமை வருகிறது அதோ எருமை வருகிறது என குரல் எழுப்பிக் கொண்டிருந் தார்.
எரும வேண்டும் என்று சொல்கிற எந்த மனிதனும் அந்தக் கூடாரத்துக்கு அருகே குடியிருக்கவில்லை. அங்கு குடியிருக்கும் மக்களின் கூக்குரலுக்கு ஒருவரும் செவி சாய்க்கவில்லை.
மேல உங்களுக்கு இருக்கற பயம் போறவரைக்கும் எருமைய கொண்டார மாட்டோம்னு இங்கிட்டு ஒருபேச்சும் உங்க எருமைய இன்னும் ஒருமாசத்துக்குள்ள ரெடி பண்ணிருவேன்னு அங்கிட்டு ஒரு பேச்சுமா தாடிய நீவிகிட்டே பேசிக் கொண்டிருந்தார் அதிகாரத்துல இருக்கற மாமனுசன். ..இப்படியாக எல்லை தெரியாமல் போகிறது அந்தப் போராட்டம்.இதற்கு மத்தியில் அந்தப் போராட்டத்துக்கு சாதிமத சாயமெல்லாம் பூசப்பட்டிருக்கிறது..
2
கதை எழுத துவங்கிய போதே இதை ஒரு முடிவற்ற கதையாக எழுத வேண்டும் என்றுதான் நினைத்திருந்தேன். எழுத நினைத்ததை யெல்லாம் எழுதிவிட்டது போல தோன்றினாலும் கதையில் ஏதோ ஒன்று குறைவது போல தெரிந்தது.
நண்பன் கவி்தாவிடம் கொடுத்து கருத்துக் கேட்டபோது இது கதையே இல்லை.ஒரு மைய கதாபாத்திரம் இல்லாமல்இருப்பதால் கதையோடு ஒன்றமுடியவில்லை .அதுவுமில்லாம நீ குறியீடா சொல்லி இருக்கற புலிப்பால்,, எருமைமாடு இது எதையுமே ஃபாலோ பண்ண முடியல. அதனால கதையில ஒரு நம்பகத்தன்மை வரமாட்டேங்குது.அதை மட்டும் சரி பண்ணிட்டேன்னா ஒருவேளை இந்தக்கதை வேறொரு தளத்தை அடையலாம்.என்றான்.
இருவரும் அமைதியாக சிந்தித்தபடி இருந்தோம்..
ஒருவரி சொல்றேன்.அதுலஇந்தக்கதை முழுமையடையுமான்னு பாரு என்றேன்.
சொல்லு என்றான்.
அந்தக் கிராமத்தின் பெயர் கூடங்குளம்.
Subscribe to:
Post Comments (Atom)
அருமையான பதிவு.
ReplyDeleteஎனது பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
கருத்துகள் மாறுபட்டாலும், உங்கள் எழுத்து நடை அற்புதம்.
வாழ்த்துகள் திரு Thamira Kadermohideen
நன்றி திரு கடங்கநேரியான்.
Please avoid Word Verification.
//அவன் எதுவும் சொல்லாமல் சுவர் மீது காலை ஊன்றியபடிநின்றான்// அது facebook சுவரா சார்??
ReplyDelete